Tuesday, January 20, 2009

திரை விமர்சனம் : வில்லு

Villu எங்க ஊர்ல இருக்கறதே 3 தியேட்டர்.. பொங்கலுக்கு எந்த படத்துக்கு போலாம்னு கொஞ்சம் கண்பியுசன்.. வில்லு, படிக்காதவன்-ல, "வில்லு" போய் பாக்கலாம்னு கிளம்பிட்டோம்.. பாட்டெல்லாம் நல்லா இருக்கே, பிரபுதேவா கொஞ்சம் நல்லா பண்ணுவார்னு நம்பி போனோம்.. டைட்டில் முழுக்க MGR பாட்டை வெச்சி முடிச்சிட்டாங்க..

தாமு முதல் சீன்ல வந்து பாட்டிகிட்ட பேட்டி எடுக்கிறார்.. (ஹீரோ Intro) தமிழ் சினிமா விதிப்படி விஜய் வந்து 4 வில்லன்களிடமிருந்து ஒரு பொண்ணை காப்பாத்துறார் (இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சார் இந்த சீன் வைப்பீங்க?).. "ஸ்பைடர் மேனா? சூப்பர் மேனா? போக்கிரி மேன்.." (டயலாக்)வழக்கம் போல பாட்டு.. குஸ்பூ மாஸ்டர்!? வேற வந்து ஸ்க்ரீன் பூரா அடுறாங்கன்னா..

அப்புறம் போலீஸ் டாப் சீக்ரட் கேஸ் ஓபன் ஆகுது.. இன்டர்நேஷனல் வில்லன் தமிழ்நாட்டு கப்பல்ல வர்றார்..போலீஸ் அவரை ரவுண்ட் அப் பண்ணுறாங்க.. விஜய் போலீஸ்கிட்ட இருந்து அவர காப்பாத்தி கடலுக்குள்ள கூட்டிட்டு போறார்.. அப்புறம் தன்னோட நண்பர்கிட்ட (போலீஸ்) அவரை ஒப்படைக்கிறார்.. விஜய் லேப்டாப்-ல எதோ மெயில் படிக்கிறார்.. அப்புறம் ஒரு கிராமத்துக்கு கல்யாணத்துக்கு கிளம்புறார்.

வடிவேல் என்ட்ரி(அப்பாடா.. வந்துட்டான்யா.. வந்துட்டான்) கொஞ்ச நேரம் காமெடி.. அப்புறம் நயன்தாரா விஜய் கூட மோதல் அப்புறம் காதல்-ன்னு விழறாங்க (ஆவ்வ்..) வழக்கம் போல ஒரு டூயட்.. ரெண்டு பெரும் நயன்தாரா அப்பா பிரகாஷ் ராஜ்-கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க முனிச் (ஜெர்மனி) போறாங்க.. அங்க பிரகாஷ் ராஜ் அவரோட நண்பர்(தேவராஜ்)-கூட (ராக்கா) மாட்டிகிட்டதுக்கு சண்டை போடுறார், அப்புறம் சேர்ந்துக்கறார்.. விஜய் பிரகாஷ் ராஜ்-கிட்ட ராக்கா-வை நான்தான் கொன்னேன்-ன்னு சொல்றார் (போலீஸ்-கிட்ட ராக்காவோட பாடியே கிடைக்காம எப்படித்தான் ராக்கா செத்துட்டார்ன்னு எல்லாரும் நம்புறாங்க-ன்னு தெரியல).. விஜய், ரவுடி-ங்கள (ஸ்ரீமன், ஆனந்த ராஜ்) அடிக்கறார்.. தேவராஜ், விஜயை சுட்டு கொல்ல கிளம்புறார். அங்க அவரோட மனைவிய(விஜயோட அம்மா) பாக்குறார்.. அப்புறம் எல்லாரும் சேர்ந்துக்கறாங்க..

விஜயோட அப்பா அவரை ஒரு தீவுக்கு கூட்டி போய் ஒரு blue ray disk-a தர்றார்.. அதுல பிரகாஷ் ராஜோட எல்லா விஷயமும் இருக்காம்.. அதே மாதிரி இவரை பத்தின ஒரு டிஸ்க் தேவராஜ் கிட்ட இருக்கு..Villu

தீவுல இருந்து வரும்போது தேவராஜ் பெரிய பாறை-ல மோதி மண்டைய போடுறார்.. அதுக்குள்ளே விஜய் அப்பாவ விட்டுட்டு பாராசூட்டோட கடல்ல குதிச்சு தப்பிக்கிறார்.. அதே நேரம் நயன்தாரா அங்க படகுல வர்றாங்க.. (அவ்ளோ பெரிய அக்சிடன்ட், அவ்வளவு பக்கத்துல இருந்தும் நயன்தாராவுக்கு எப்படி தெரியாம போச்சுன்னு யார போய் கேக்குறது?)

அந்த blue ray டிஸ்க்-எ பிரகாஷ் ராஜ்கிட்ட தர்றார் விஜய்.. அப்புறம் நயந்தாரவ கல்யாணம் பண்ணி தர சொல்றார்.. இதை பார்த்த நயன்தாரா, ஓடி போய் விஜய் அம்மாகிட்ட இவரை பத்தி சொல்ல அந்த அம்மா ஆரம்பிக்குது பாருங்க ஒரு பிளாஸ்பேக் தமிழ் திரை உலக வரலாறுல அப்படி ஒன்ன யாரும் பாத்து இருக்க முடியாது..

விஜயோட உண்மையான அப்பா மேஜர் சரவணன் (வேற யாரு விஜய்தான்) ஒரு நேர்மையான ஆர்மி ஆபீசர். (என்னால சிரிப்ப அடக்கவே முடியலீங்கன்னா - அவர பாத்தா சிரிப்பு போலீஸ் மாதிரியே இருக்கு..) அவரோட மனைவி ரஞ்சிதா, மகன் விஜய். ஒரு ஆப்ரேசன்ல பெருசா?! சண்டை போட்டு ஒரு கூட்டத்த காப்பத்துறார் (எத்தன தடவைதான் இதவே பாக்குறது)..

விஜய் தலைமைல ஆயுதம்-லாம் ஒரு வண்டில கொண்டு போறாங்க.. வழில பிரகாஷ் ராஜ், சம்பத், மலைகோட்டை வில்லன் மூணு பேரும் விஜய் அடிச்சிட்டு ஆயுதத்த கடத்துறாங்க. விஜய்-எ கொலை பண்ணுறாங்க.. போலீஸ்-கிட்ட விஜய்தான் ஆயுதம் கடத்துனதா சொல்லிடறாங்க.. விஜய் மேல தேச துரோகி குற்றம் சாத்துறாங்க.. ரஞ்சிதாவ கொடுமை படுத்துறாங்க.. ரஞ்சிதா விஜய்-எ இந்த பிளாஷ்பேக் சொல்ற அம்மாகிட்ட கொடுத்து வளர்த்த சொல்றாங்க.. கடைசீல மகன் விஜய் பிரகாஷ் ராஜ் தவிர மத்த இரண்டு பேரையும் கொன்னுட்டு பிரகாஷ் ராஜ ரஞ்சிதாகிட்ட கூட்டிட்டு வர்றார்.. நடுவுல முதல் சீன்ல கடத்துன வில்லன் போலீஸ்கிட்ட இருந்து தப்பிச்சு வர்றார்.. விஜய் அவரையும் கொன்னுடறார்..

அப்புறம் பிரகாஷ் ராஜ அடிச்சு ஊர் மக்கள் முன்னாடி உண்மைய சொல்ல வைக்கிறார்.. கடைசீல அவரையும் கொன்னுடறார்.. அவ்ளோதானாம் படம் முடிஞ்சிருச்சாம்.. நயன்தாரா என்ன ஆனாங்கன்னே தெரியலைங்கன்னா (ரொம்ப முக்கியம்!!)

படம் ரொம்ப சுமார்.. வடிவேலு கொஞ்சம் நேரம்தான் வர்றார்.. காமெடி ஒன்னும் பெருசா இல்ல.. கிராமத்துல மைக் செட்டு கட்டுரவர் எப்படி ஜெர்மனி வர்றார்-ன்னு பிரபு தேவா-கிட்ட யாராவது கேட்டு சொல்லுங்க..

பாடல்கள் எல்லாம் சூப்பர்.. நடனம் பாக்கலாம் (நயன்தாராவையும்).. படம் போக்கிரி, கில்லி அளவுக்கு இல்லைனாலும் குருவி, அழகிய தமிழ் மகனுக்கு பரவால்ல..

பிரபு தேவா கொஞ்சம் உஷாராகனும்.. போக்கிரி சாயல் நிறைய இடத்துல தெரியுது.. பிரகாஷ் ராஜ், ஆனந்த ராஜ், வடிவேல் இவங்களை எல்லாம் இன்னும் கொஞ்சம் நல்லா பயன்படுத்தி இருக்கலாம்..

மொத்தத்தில் வில்லு
- ஒரு தடவை பார்க்கலாம்..

அடுத்த பதிப்பில் சந்திப்போம்..


Wednesday, January 14, 2009

படித்ததில் பிடித்தது

எங்கோ எப்போதோ படித்தது..

அழகானவை எல்லாம்
உன்னை ஞாபகப்படுத்துகின்றன..
உன்னை ஞாபகப்படுத்தும் எல்லாமே
அழகாகவே இருக்கின்றன..

----------------------------------------------------
நட்பு, காதல் மற்றும்
இன்ன பிற உறவுகளுக்குள்
வரையறுக்க முடியாத - ஆனால்
என் வானளாவிய அன்புக்குச் சொந்தக்காரி!
----------------------------------------------------
நேரில் கோபித்துக்கொண்டு
கனவில் வந்து கொஞ்சும்
மக்கு நீ!

----------------------------------------------------
எத்தனையோ அழகான‌
பெண்களைப் பார்த்தும்
தடுமாறாத எனக்கு...
உன்னைப்
பார்த்ததும் என்
தடுமாற்றங்களும்
அழகாக இருக்கின்றன..
என்னடி செய்தாய் என்னை ?
----------------------------------------------------
என் வீட்டு வாசலில் அஞ்சல் பெட்டி..
புதிதாக ஏதும் அஞ்சல் வந்திருகின்றதா
என்று எட்டி பார்த்தேன்..
அசைவற்று கிடந்தது ஒரு சிறிய இறகு..
எந்தப் பறவை எழுதிச் சென்று இருக்கும்?
----------------------------------------------------
விளையாட ஆள் இல்லை..
சோகத்தில் பொம்மைகள்..
பள்ளியில் குழந்தை..
----------------------------------------------------
கோடை விடுமுறை..
மகிழ்ச்சியில் குழந்தைகள்..
கவலையில் பள்ளி காக்கைகள்..

Monday, January 12, 2009

கொஞ்சம் கிறுக்கல்

நான் உன்னை..
நினைத்து பார்க்கவும் நினைக்கவில்லை..
மறக்கவும் நினைக்கவில்லை..
இருப்பினும் தினம் பார்க்கும் எதோ ஒன்று
உன்னை நினைவூட்டி சென்று விடுகிறது..
அனுதினம் கரையை வருடி செல்லும்,
அலையை போல..
-------------------------------------------
கண்ணிமைக்கும் நொடியில்,
கடந்து செல்லும் அவளது
கயல்விழி கவனத்தை களவாடி செல்கிறது..
மலரில் இருந்து மதுரம் குடித்து செல்லும்
சிறிய வண்ணத்துப்பூச்சியை போல..
-------------------------------------------
பாடலில் இரு வரி திருடி விட்டதற்காக
இங்கே வழக்காடுகிறார்கள்..
என் கவிதை உணர்வையே..
களவாடி காற்றோடு கலந்து விட்டாள் அவள்..
எங்கு சென்று வழக்கு பதிவு செய்வது?

-------------------------------------------
காதலில் விழுந்தால் கவிதை வருமாம்..
காதலில் தோற்றால் தத்துவம்/ஞானம் வருமாம்..
நான் விழவும் இல்லை.. தோற்கவும் இல்லை..
எனக்கேன் வருகிறது??
எல்லா கேள்விக்கும், விடை இருந்தே ஆக வேண்டுமா என்ன?
(கொஞ்சம் மொக்கை-யா ட்ரை பண்ணா இப்படித்தான் சார் வருது.. :-) )

Friday, January 9, 2009

திரை விமர்சனம் : சசியின் "பூ"

கடந்த வாரம் சசியின் "பூ" படம் பார்த்தேன்..
அடுத்த நாள் ஆபீஸ் போகணும், இருந்தாலும் பரவால்ல படம் பாத்துடுவோம்னு எங்க சீனியர்ஸ்கூட பாத்தேன்..

படம் நாயகி (பார்வதி) பிளாஷ் பேக் சொல்லுற மாதிரி ஆரம்பிக்குது.. கதைப்படி நாயகி (பார்வதி) அவங்க மாமவ (ஸ்ரீகாந்த்) சின்ன வயசுல இருந்து எக்கச்சக்கமா லவ் பண்ணுது.. ஸ்ரீகாந்த் இன்ஜினியரிங் படிக்கிறார்.. பார்வதி பட்டாசு பாக்டரில வேலை செய்யுது.. ஸ்ரீகாந்த் படிச்சு முடிச்சிட்டு ஊருக்கு வர்றார்.

ஸ்ரீகாந்தோட கிளாஸ்மேட், பார்வதி காதலிக்கரத ஸ்ரீகாந்த் கிட்ட சொல்லிடுது.. நடுவுல ஸ்ரீகாந்த் அவரோட நண்பர் வீட்டுக்கு போறார். அங்க அவரோட குழந்தைய பாக்குறார்.. மாமா பொண்ண கல்யாணம் பண்ணதால அந்த குழந்தை மனநிலை சரியில்லாம இருக்கு.. (ட்விஸ்ட்)
பார்வதிய கல்யாணம் பண்ணா இந்த மாதிரி ஆயிடுமோன்னு பயப்படறார்..

அவங்க அப்பா அவர தன்னோட முதலாளி பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்றார் (பணம் சார் பணம்). ஸ்ரீகாந்த் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிடறார்.. ஸ்ரீகாந்தோட அப்பா, மகன் தன்னை திட்டிட்டானே.. கனவெல்லாம் வீணாயிடுச்சேன்னு சரக்கு அடிச்சிட்டு தண்ணில விழறார்.. அப்புறம் அவர வீட்டுக்கு கூட்டி வந்து மருத்துவம் பாக்குறாங்க.. ஸ்ரீகாந்த் வேற வழி இல்லாம (தெரியல) அந்த முதலாளி பொன்னையே கல்யாணம் பண்ணிக்கறார்.

பார்வதியோட அண்ணன் பார்வதிக்கு ஒரு மளிகை கடைக்காரர கல்யாணம் பண்ணி வைக்கிறார். அவரும் பார்வதிய நல்ல பாத்துகிறார்..

பார்வதி ஊருக்கு வந்த ஸ்ரீகாந்த பாக்க போகுது.. அங்க அந்த புது பொண்ணு ஸ்ரீகாந்த கொஞ்சம் கூட மதிக்கறதே இல்லைங்கரத தெரிஞ்சுக்குது..

கடைசீல தங்கராசு (வேற யாரு ஸ்ரீகாந்த்தான்) வாழ்க்கை இப்படி போய்டுச்சேனு பயங்கரமா அழுவுது.. வெளிய ஸ்ரீகாந்தோட அப்பா பார்வதிய பாத்து அழறார்..

கேமரா, படம் முழுக்க பார்வதியவே சுத்தி சுத்தி வருது.. அதுவும் ஸ்ரீகாந்த வெறித்தனமா காதலிக்கறது சிலருக்கு யதார்த்தமா இருக்கலாம்.. எனக்கு கொஞ்சம் எரிச்சலாதான் இருந்திச்சு.. (யாருப்பா அது "வயித்தெரிச்சலா"-ன்னு கேக்குறது? என் மாமா பொண்ணு பார்வதியவிட அழகா இருப்பா..)

ஸ்ரீகாந்த் மொத்த படத்துல 15 நிமிசம் கூட வரல.. ஓரமா வந்துட்டு போய்டுறார்.. பாவம் நடிக்க சந்தர்ப்பமே இல்ல.. பார்வதி நடிப்பு சூப்பர்.. "ஆவாரம் பூ" பாடல் நல்லா இருக்கு.. பருத்தி வீரன் படத்தோட சாயல் நிறைய இடத்தில் தெரியுது...

எனக்கு பிடிச்ச சீன் : வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் ஸ்ரீகாந்த பாக்குறதுக்கு பார்வதி காத்திருக்கு.. அப்போ அதோட தோழி "இன்னுமா நீ தங்கராச மறக்கலன்னு?" கேக்குறதுக்கு "எதுக்கு மறக்கணும்?"ன்னு கேக்குறது மறக்க முடியாத காட்சி..

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பணக்காரங்க எல்லாம் மத்தவங்கள மதிக்க மாட்டாங்க.. ஏழைங்க எல்லாம் ரொம்ப நல்லவங்கன்னு சொல்லிட்டு இருப்பாங்கன்னு தெரியலைங்க..

இந்த படத்துல என்ன மெசேஜ் சொல்ல வர்றாங்கன்னு புரியவே இல்ல.. (புரிஞ்சு மட்டும் என்ன பண்ண போறோம்?) அத்தை பொண்ண கல்யாணம் பண்ண கூடாதா? பணக்கார வீட்டு பொண்ண கல்யாணம் பண்ண கூடாதா?
எனக்கு புரிஞ்சது, "அப்பா சொல்றாங்கன்னு, வசதியான பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டா.. வசதி வரும்.. ஆனா வாழ்க்கை போய்டும்"..

மொத்தத்தில் "பூ" - கிராமத்து பூ - சிலருக்கு பிடிக்கும்..

அடுத்த பதிப்பில் சந்திப்போம்..

Wednesday, January 7, 2009

திரை விமர்சனம் : திண்டுக்கல் சாரதி

இந்த கிறிஸ்துமஸ்-க்கு ஊருக்கு போயிருந்தேன்.. தியேட்டர்ல படம் பாத்து ரொம்ப நாள் ஆச்சே.. இந்த தடவை போலாம்ன்னு தம்பிகளை கூட்டிட்டு திண்டுக்கல் சாரதி பாக்க தாராபுரம் சத்யா தியேட்டர் போனேன்.. சன் டிவில வேற 10 நிமுசதுக்கு ஒரு தடவை போட்டு கொல்றாங்களே.. கருணாஸ் படமாச்சே கொஞ்சமாவது காமெடி இல்லாமயா போயிடும்தாங்க போனேன்..

DTS எபக்ட்ஸ்ல டைட்டில் போடும்போதே கொஞ்சம் டவுட் ஆச்சு.. சரி அப்படி என்னதான் சொல்றாங்கன்னு பாத்தா, மொத சீன்லயே கருனாச கோவில் யானை தூக்கிட்டு ஓடுதாம்.. அந்த ஊர்ல எல்லாரும் பயந்து ஒடுராங்கலாம்.. போலீஸ் (லிவிங்ஸ்டன்) மைக் எல்லாம் கட்டி அலப்பறை பண்றாங்களாம்.. இத சன் செய்திக்கு நிருபர் படம் பிடிக்கிறாராம்.. கடைசீல ஒரு பட்டாசு வெச்சு கருனாச காப்பாத்துறாங்க.. இது காமெடி-யாம்.. என் தம்பி வேற என்னை மொறைக்கிறான்..

கருணாஸ் ஒரு பிரஸ் நடத்துறார்.. அவர எல்லா பொண்ணுங்களும் வேணாம்னு சொல்லிடுது.. ஏன்னா அவரு கருப்பாம்.. அப்புறம் ஹீரோயின் வீட்டுக்கு போறாங்க.. அந்த அம்மா கருனாச பிடிச்சிருக்கு சொன்னதும் ஒரு டூயட்.. ( கொடுமைதான்) அதுக்கு அப்புறம்தான் ட்விஸ்ட்.. மனைவி கூட அஜித் படம் பாக்குறார்.. டென்சன் ஆகுறார்.. அப்புறம் மனைவிய சந்தேகபடறார்.. ஆஅவ்வ்வ்வ்... "அண்ணா, இதுக்கு பேசாம வீட்ல 'கோலங்கள்' பாத்திருக்கலாம்".. சொன்னது என்னோட தம்பி.. நானும் எவ்வளோ நேரம்தான் இண்ட்ரஸ்டா படம் பாக்குற மாதிரி நடிக்கறது..

அப்புறம் படம் சுத்து சுத்துனு சுத்துது.. கருணாஸ், அஜித் வீட்டுக்கலாம் போன் பண்ணி அழறார்.. (அம்மாடி முடியலைடா சாமி)
மனைவிக்கு பிடிக்கும்னு சரக்கு எல்லாம் அடிக்கறார்..
குத்து பாட்டு வேற.. (ரொம்ப முக்கியம்டா!!)
தம்பியவே சந்தேகப்படுறார்.. அம்மாவ அடிக்க போறார்..
மெண்டல் ஆஸ்பிட்டல்ல சர்டிபிகேட் வாங்கறார்..
கருணாஸ் கதை கேட்டு நடிச்சிருக்கலாம்.. நிறைய காமெடி பட்டாளம்.. ஆனாலும் எரிச்சல்தான் வருது..

ஒரு சீன்ல கருணாஸ் வாழை மரத்த பிடிச்சிட்டு அழறார்.. தியேட்டர்ல எல்லாரும் கப் சிப்.. என் தம்பி ( B.Sc. Vis Com. ) மட்டும் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.. !! :-)

பருத்திக்காடு பத்திக்கிச்சு பாடல் ஒ.கே.. மத்த பாட்டெல்லாம் தேறாது..

இதுக்கு மேல உங்களால படிக்க முடியாது.. என்னால எழுதவும் முடியாது..

நானும் ஆழ்வார், திருப்பதி மொக்கை படம் எல்லாம் பார்த்தேனுங்க.. ஆனா இந்த படத்துல மட்டும் பாதில எந்திருச்சி ஓடிரலாம்னு ஆயிடுச்சி.. அவ்ளோ மொக்கை..

ஒரு சீன்ல கருணாஸ் குப்பை காட்டுல நாய்கிட்ட கடி வாங்கறார் பாருங்க.. எனக்கு கண்ணுல கண்ணீரே வந்திருச்சி.. (பின்ன 150 ரூவான்னா சும்மாவா, படம் 10 ரூவாய்க்கு கூட போகாது)

சிம்ப்ளா சொல்லனும்னா ஒரு மெகா சீரியல சினிமா டைட்டில் போட்டு ரிலீஸ் பண்ணி இருக்காங்க.. உஷார் மச்சான் உஷார்..

மொத்தத்தில் "திண்டுக்கல் சாரதி" - வேணாம் விட்ருங்க..
அடுத்த பதிப்பில் சந்திப்போம்..